புதன், 10 டிசம்பர், 2008

அருணாச்சல மகிமை

அருணாசல அருள் வரலாறு : 'நம்மால் தான் உலகம் படைக்கப்பட்டது, நான் இல்லையேல் இந்த உலகமில்லை' என கர்வம் கொண்ட பிரம்மன், தன் தந்தை மாகவிஷ்ணுவிடம் போய், திருமாலே! 14 உலகங்களையும் ஏழு மேகங்களையும், ஏழு பருவங்களையும் மனதால் படைத்தேன். அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்தையும் உண்டாக்கினேன். ஆகவே நானே கடவுள் என்பதையும், என் மகன்தான் பிரம்மன் என்பதையும் மறந்து விடு. நான் உலகத்தை படைக்காவிட்டால் நீ எப்படி காத்தல் தொழிலை செய்ய முடியும். யாவற்றையும் நான்தான் காத்து வருகிறேன் என்ற அகம்பாவத்தை ஒழித்துவிடு.
இல்லையெனில் உன் பதவியை நீக்கிவிட்டு மற்றொரு திருமாலை உருவாக்குவேன். பிருகு முனிவரின் சாபத்தால் பத்து முறை பூமியில் பிறந்தாய். உன்னை படைத்தல்லவே என் கைகள் கறுத்து விட்டன. உன்னிடத்தில் நான் பிறந்திருந்தாலும் உன்னை அழித்து விடக்கூடிய ஆற்றல் எனக்குண்டு என்றார். அதற்கு மகாவிஷ்ணு பிள்ளை செய்யும் தவறுகளை தந்தை பொறுத்து கொள்வதை போல் எண்ணி என்னிடம் பேசிவிட்டாய். சிவன் உன்னுடைய தலைகளில் ஒன்றை பறித்து எறிந்த காலத்தில் அதனை மீண்டும் கொள்ளும் ஆற்றல் உனக்கு இல்லை. அவ்வாறு இருக்கும்போது உன்னை எவ்வாறு தலைவன் என்று ஏற்றுக் கொள்ள முடியும்?
சோமுகாசுரன் உன்னிடம் இருந்த வேதங்களை பறித்து சென்றபோது, நான் மச்ச அவதாரம் எடுத்து அசுரனை கொன்று மீட்டு தந்தேன். மற்றும் பல அசுரர்களை கொன்ற எனக்கு உன்னை கொல்வது சுலபம் என்றார். இருவருக்கும் இடையில் யார் பெரியவன் என்ற பேச்சு பெரும் போராக மாறியது. அண்டகோடிகள் அனைத்தும் அதிர்ந்தன. தேவர்கள் அனைவரும் பயந்து சிவனை சரணடைந்தனர். சிவன் போர் புரிந்து வரும் இருவருக்கும் இடையில் பெரும் அக்னி மலையாக தோன்றினார். இந்த ஒளி மலையை பார்த்த திருமாலும், பிரம்மனும் அளவு கடந்துள்ள இந்த மலையின் அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றரோ அவரே பெரியவர் என முடிவு செய்தனர். அடி முடியை இருவரும் காண முடியாததால், தான் முதற் கடவுள் அல்ல என தெளிந்த திருமாலும், மாகவிஷ்ணும் சிவனை சரண் அடைந்தனர். சினம் தணிந்த சிவபெருமான் 'நாம் இத்தலத்தில் அருள்பாலித்ததால் இன்று முதல் இத்தலத்தை சுற்றிலும் மூன்று யோசனை தூரம் வரைக்கும் தூய்மையான புனித பூமியாக விளங்கும். அகண்ட ஒளி வடிவாயுள்ள மலை சிறிய உருவங்கொண்ட மலையாகும். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு பிறவி நோயை நீக்குவோம். இந்த மலையும், நகரமும் பிரளய காலத்திலும் அழிவின்றி நிற்கும். கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் மலையின் உச்சியில் ஓரொளி காண்பிப்போம். இவ்வொளியை கண்டு தொழுவோர் தம் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் வீடு பேற்றினை அளிப்போம் என்றார். இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும் பெயர் பெறும். சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் பெயர் பெறும். இம்மலையின் பெயரினை ஒருமுறை சொல்லியவர் திரு ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்தற்குரிய பயனை அடைவர் என சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினார். இங்கு மலையே இலிங்க வடிவாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை: